அம்பாங்–ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி பாதையில் நேற்று ஏற்பட்ட ரயில் தடம் புரண்ட சம்பவத்திற்கான காரணத்தை அறிய தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான அபாட் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து அபாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.ஓ.பி நடைமுறைகள், பாதுகாப்பு அமைப்புகள், ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இச்சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு இயக்குநர்களுக்கு அபாட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அலட்சியம், விதிமுறை மீறல் அல்லது உரிம நிபந்தனை மீறல் காரணமாக சம்பவம் நடந்ததா? என்பது கண்டறியப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 25 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.








