மலேசியா ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை அறிமுகப்படுத்தி வரும் மலேசிய திட்டம் காலாவதியாகி விட்டது. புதிய அணுகுமுறையின் வாயிலாக அத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வரையப்பட்டு, செயல்படுத்தப்பட்ட இந்த 5 ஆண்டு மலேசியத் திட்டம், தொடக்க காலத்தில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின. இதன் மூலம் முந்தைய தசாப்தங்களில் நாட்டின் பொருளியல், சமூகவியல் வளர்ச்சியில் பல மேம்பாடுகளை காண முடிந்தது.இப்போது நாடு 6 ஆவது தசாப்தத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த 60 ஆண்டு காலகட்டத்தில் முந்தைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே திட்டங்களுக்கு இன்னமும் உயிர் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால ஆய்வறிக்கையின் உள்ளடக்கங்களில் காண முடிவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இத்திட்டங்கள் யாவும், இந்த 21 ஆம் நூற்றாண்டில் இனியும் பொருந்தாது என்ற கசப்பான உண்மையை நாடு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர். கடந்த 60 ஆம், 70 ஆம் ஆண்டுகளில் செப்பனிடப்பட்ட பழைய வளர்ச்சி நிலையிலான பொருளாதாரப் பாதையிலிருந்து நாடு விலகிச் செல்வதற்கான காலம் கனிந்து விட்டது. அதற்கான தருணமும் கண் முன்னே காத்திருக்கிறது.இந்நிலையில் இன்னமும் பழையப் பந்தையே உருட்டிக்கொண்டு இருக்க வேண்டாம். புதிய புத்தாக்க சிந்தனை வேண்டும். புதிய அணுகுமுறையுடன் அனைத்து இனத்தவர்களுக்கும் பயன் அளிக்கும் வகையிலான பொருளாதாரத் திட்டங்கள் கையாளப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். 







