புத்ராஜெயா, ஆகஸ்ட்.05-
உச்சநீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்கு விசாரணை அமர்வுகள், தீபகற்ப மலேசியாவில் பிற முக்கிய நகரங்களிலும் நடைபெற்ற பழைய நடைமுறையை நாட்டின் புதிய தலைமை நீதிபதி வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே மீண்டும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கூட்டரசு நீதிமன்றம் மற்றும் அப்பீல் நீதிமன்ற விசாரணை அமர்வுகள் புத்ராஜெயா, சில வேளைகளில் சரவாக்- கூச்சிங்கிலும், சபா - கோத்தா கினபாலுவிலும் நடைபெறுகின்றன.
இவ்விரு நீதிமன்றங்களிலும் மேல்முறையீடுகள் மட்டுமே விசாரணைகளாக எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் தீபகற்ப மலேசியாவில் புத்ராஜெயாவில் மட்டும் வழக்குகள் நடைபெறுவது ஏற்புடையது அல்ல.
முந்தைய காலங்களில் நடைபெற்றதைப் போல கோலாலம்பூருக்கு அப்பாற்பட்ட நிலையில், பினாங்கு ஜார்ஜ்டவுன், ஜோகூர் பாரு, கிளந்தான் கோத்தா பாரு போன்ற ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சையிட் இஸ்கண்டார் சையிட் ஜாஃபார் வலியுறுத்தினார்.
இதன் மூலம் பல வழக்கறிஞர்கள் குறிப்பாக சட்டத் தொழிலுக்கு புதியதாக நுழைகின்ற அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள், மிக நுட்பமான சொல்லாடல் நிறைந்த அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றங்களின் விசாரணைகளின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று சையிட் இஸ்கண்டார் பரிந்துரை செய்துள்ளார்.








