நிபோங் தெபால், ஜூன் 22-
மக்களை அச்சுறுத்துவற்கும், தூண்டிவிடுவதற்கும் அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான Black Rock விவகாரத்தை ஒரு சாதனமாக பயன்படுத்த வேண்டாம் என்று சில தரப்பினருக்கு தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் நினைவுறுத்தினார்.
இஸ்ரேல் அல்லது அந்த நாட்டில் தளமாக கொண்டுள்ள எந்தவொரு நிறுவனத்துடன் மலேசியா ஒத்துழைப்புகொள்ளும் நடவடிக்கை முற்றாக நிராகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெளிவான விளக்கத்தை அளித்து விட்டார்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் Black Rock நிறுவனம், Malaysia Airports Holding Berhad பங்குகளை வாங்குகின்றது என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி, மக்களை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுவது குறுகிய அரசியல் சிந்தனையை கொண்ட ஒரு தந்திரமாகும் என்று பாஹ்மி பட்சில் வர்ணித்தார்.
Malaysia Airports Holding Berhad மறுகட்டமைப்பு தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனை நடவடிக்கையிலும் Black Rock ஈடுபடவில்லை என்று அந்த பன்னாட்டு நிறுவனத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் நிறுவனமான Global Infrastructure Partners பகிரங்கமாக அறிவித்து விட்டது.
இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ம லேசியாவில் இடம் இல்லை என்பதை பிரதமரும் தெளிவாக விளக்கி விட்டார்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனம், Malaysia Airports Holding Berhad பங்குகளை வாங்குகிறது என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தீய நோக்கில் இவ்விவகாரத்தை அரசியலாக்கி வரும் தரப்பினரை அரசாங்கப் பேச்சாளரான பாஹ்மி பட்சில் இன்று கடுமையாக சாடினார்.








