கோலாலம்பூர், பிப்ரவரி.07-
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, சோகோ வணிக வளாகத்தின் முன்பு நடைபெறவிருந்த Garah அமைப்பின் திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.
பாதுகாப்புக் கருத்தாய்வுகள் மற்றும் திரட்டப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், இப்பேரணியானது பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று போலீஸ் தீர்மானித்ததாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
Gerakan Anti Rumah Anutan Haram என்ற Garah அமைப்பிடமிருந்து கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி இப்பேரணி குறித்த அறிவிப்புக் கடிதம் கிடைத்தாக ஃபாடில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை, இரவு 8 மணிக்கு அமைதியான முறையில் ஒரு கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு மதிப்பீடுகளை நடத்தியதுடன், பேரணி நடப்பதாக இருந்த இடத்தைச் சுற்றியுள்ள வளாகங்களின் உரிமையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றனர்.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி சோகோ வணிக வளாகம், Pertama வளாகம், Harissons மற்றும் அருகிலுள்ள பல வளாகங்களின் உரிமையாளர்களிடமிருந்து போலீசார் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைப் பெற்றதாக ஃபாடில் குறிப்பிட்டார்.








