ரஹ்மா உதவித் திட்டமான சாரா-வின் கீழ், பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜா ஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றமான நாக்கோல்-ன் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் உதவி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான உணவுகளைப் பெறுவதற்கும் வழிவகுக்க வேண்டும் என்று ஜாஹிட் தெரிவித்தார்.
தற்போது சாரா திட்டத்தில் முட்டை, ரொட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட 15 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 81 லட்சம் பேர் பயனடைகின்றனர் என்பதையும் துணைப்பிரதமர் சுட்டிக்காட்டினார்.








