ஜோகூர் பாரு, லார்கின் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 69 வயது வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்புக் கம்பி கொண்ட துப்புரவுப் பிரஷை காட்டி மிரட்டியதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோகூர் பாரு செலத்தான் மாவடட் போலீஸ் தலைவர் அஸ்ரி ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்திய பின்னர் மீதித் தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறி, ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறே சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில், குறைந்தபட்ச பலவந்தத்தை பயன்படுத்தி அவரைக் கட்டுப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு முன் குற்றப் பதிவுகள் இல்லை என்றும், மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பான காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








