Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம்: கல்வி இலாகா விசாரணை
தற்போதைய செய்திகள்

சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம்: கல்வி இலாகா விசாரணை

Share:

பேரா, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்பாக அண்மையில் வெளியான புகார்கள் குறித்து கல்வி இலாகா விசாரணை மேற்கொண்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில இந்தியர் விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொண்டு, உரிய முடிவை எடுக்குமாறு கல்வி அலுவலகத்திடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பள்ளியில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை சமூக ஊடகங்கள் அல்லது பொது தளங்களில் வெளியிடுவதற்குப் பதிலாக, முறையான வழியில் கல்வி அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெற்றோர்-ஆசிரியர் சங்கம், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.

கல்வி இலாகாவின் நடவடிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அருகிலுள்ள மற்றொரு தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அமைதியான சூழலில் தொடர்ந்து கல்விப் பணியை மேற்கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்துடனும் நல்ல உறவு நிலவி வருவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும், பள்ளிக்குத் தேவையான நிலம் தொடர்பில் பிரதமரின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாநில அரசாங்கத்திடமிருந்து இதுவரை நிதி பெறாத இப்பள்ளிக்கு, அதன் தேவைகளை கருத்தில் கொண்டு 23 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கப்படுவதாகவும் டத்தோ சிவநேசன் அறிவித்தார்.

Related News