நாட்டில் 4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்வதற்கான விரிவான சோதனை நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள தகவலில், உண்மையான அகதிகளையும், குடிநுழைவு அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காணும் வகையில் தற்போதைய தகவல் சேகரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அகதி அந்தஸ்து உறுதி செய்யப்படும் மியன்மார் நாட்டவர்கள், முதற்கட்டமாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான நடவடிக்கையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், தடுப்பு முகாம்களுக்கு வெளியே உள்ள மியன்மார் நாட்டவர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய அணுகுமுறை ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கி வருவதாக சைஃபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








