முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், அவர்களுக்கு இரண்டாவது தொழில் வாய்ப்புகளை வழங்க தனியார் துறைகள் முன்வர வேண்டும் என பிரதமரின் மனைவியும், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரச மலேசியக் கடற்படையின் முன்னாள் படைவீரர் சங்கம் ஏற்பாடு செய்த மை ஹீரோஸ் கோல்ஃப் சாம்யியன்ஷிப் கப் 2026 நிகழ்வில் உரையாற்றிய அவர், ஆயுதப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், முன்னாள் ராணுவ வீரர்கள், சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘கெம்பேன் தாபுங் பாஹ்லாவான்’ மற்றும் ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் விவகாரத் துறையான JHEV-இன் கீழ் செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கங்களுக்கு அதிகமானோர் ஆதரவளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
அதேவேளையில், வழங்கப்படும் ஒவ்வொரு தொகையும் நமது படை வீரர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக நேரடியாக சென்றடையும் என்றும் வான் அஸிஸா உறுதியளித்துள்ளார்.








