இந்தோனேசியாவில் மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், பணிக்கு 1½ முதல் 2 மணி நேரம் முன்பாக வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங் வெளியிட்டுள்ள தகவலில், விமானப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பே போதைப்பொருள் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு, அனுமதி பெற்ற பின்னரே பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மலேசிய போக்குவரத்து துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள விமானியின் செயலை தனிநபர் ஒருவரின் பிரச்சினையாக மட்டும் கருதாமல், விமானப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகளையும் ஆராய வேண்டும் என்றும் தியோங் கிங் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமானது, மலேசியா ஏர்லைன்ஸின் 1,260 விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








