பினாங்கு, ஜார்ஜ் டவுன் ஜாலான் மெகலிஸ்டர் பகுதியில் இன்று காலை அவ்வழியே சென்ற பெரோடுவா அதிவா கார் மீது மிகப் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் அதில் பயணித்த மூவர் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.
காலை 9.12 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தை வீரர்கள் அடையும் முன்னரே, பொதுமக்கள் அம்மூவரையும் காரிலிருந்து மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரம் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்து, போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








