போலீசாரின் கண்களை மறைப்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை போதைப்பொருளை பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்த ஆடவர் ஒருவரின் தந்திரம் அம்பலமானதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஹம்சா அகமது தெரிவித்தார்.
பினாங்கு, Gat Lebuh Macallum- மில் உள்ள ஒரு அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரை கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையில் 3 லட்சத்து 9 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 100 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 46 வயது வேலையற்ற நபர் கைது செய்யப்பட்டதாக ஹம்சா அகமது தெரிவித்தார்.








