காஜாங் எம்ஆர்டி நிலையத்தில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் 23 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்றில், அந்நபரின் பாலியல் சேட்டைகள் பதிவாகியுள்ளன.
நேற்று ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9 மணியளவில் காஜாங் எம்ஆர்டி நிலையத்தின் கேட் ஏ பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், சந்தேக நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 509-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








