குவாந்தன், மே 09-
பகாங், குவாந்தன், ஜாலான் செமாம்பு சாலையில், உயர் ஆற்றல் கொண்ட வாகனத்தை மோதி விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று இரவு மணி 11.30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் உயிரிழந்தவர், உயர்க்கல்விக்கழக மாணவரான 22 வயது முஹம்மது சுஃபி சஹாருதீன் என அடையாளம் காணப்பட்டதாக, குவாந்தன் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
அதேவேளையில், நிசான் நவாரா ரக வாகனமோட்டியான 44 வயது ஆடவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியதாக அவர் கூறினார்.
சம்பவத்தின் போது, அவ்வாடவர் ஜாலான் ஹஜி அஹ்மத் சாலைக்கு செல்வதற்காக, தனது வாகனத்தை வலது சந்திப்புக்குள் நுழைய முட்பட்ட போது, எதிர்திசையில், மோட்டார்சைக்கிளில் வந்த அம்மாணவர், அந்த வாகனத்தை மோதியுள்ளது, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர், சடலம் உடற்கூறு ஆய்வுக்காக தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, வான் முகமது ஜஹாரி கூறினார்.








