உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக, சிலாங்கூர் மாநிலத்தின் மருத்துவச் சேவைக்கான செலவுகள் 15 முதல் 25 விழுக்காடு வரை உயரக்கூடும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய அவர், மலேசியாவின் மருந்துப் பயன்பாட்டில் சுமார் 70 முதல் 80 விழுக்காடு இறக்குமதியையே சார்ந்திருப்பதால், அனைத்துலக வர்த்தகப் பாதைகளில் நிலவும் பதற்றம் நேரடியாக மருத்துவச் செலவுகளைப் பாதிக்கும் என்று விளக்கமளித்தார். இதன் தாக்கம் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் முழுமையாக உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மேய் ஸீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமிருடின், மலேசியா ஒரு ஹலால் மருத்துவ மையமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், உள்நாட்டுச் சுகாதாரக் கட்டமைப்பின் திறனை உறுதி செய்த பின்னரே வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் திட்டங்கள் குறித்து ஆராய முடியும் எனத் தெரிவித்தார்.








