Mar 31, 2026
Thisaigal NewsYouTube
தாயாரை கொன்று ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்ததாக இந்திய நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தாயாரை கொன்று ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்ததாக இந்திய நபர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், நவ.26-


தனது சொந்த தாயாரை கொன்று மூன்று ஆண்டு காலமாக வீட்டின் ஐஸ் பெட்டிக்குள் வைத்திருந்ததாக பகுதி நேர பாதிரியரான ஓர் இந்திய நபர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஊடகவியலாளர்களின் மிகுந்த கவன ஈர்ப்புக்கு மத்தியில் இன்று காலை 9.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைவிலங்கிப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 53 வயதுடைய என். டியானேஸ் என்ற அந்த பகுதி நேர பாதிரியார் , மாஜஸ்திரேட் அத்திகா முகமட் சாயிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதிக்கும் 26 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள தனது வீட்டில் தனது தாயாரான 77 வயது கேத்ரீன் டேனியல் என்ற மூதாட்டியை கொலை செய்து, சடலத்தை மூன்று ஆண்டு காலமாக ஐஸ் பெட்டியில் வைத்திருந்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை, 12 பிரம்படித்தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிக்க வகை செய்யம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது தாயாரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கொன்றதாக ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்த அந்த நபர், தனது தாயாரை மழுங்கியப் பொருளினால் நெஞ்சில் கடுமையாக தாக்கி கொன்றதாக பெட்டாலிங்ஜெயா, பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த மூதாட்டியின் உடலில் நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 12 ஆம் தேதி காலையில் அந்த நபரே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து தகவலை கூறியதைத் தொடர்ரந்து அந்த இரண்டு மாடி கொண்ட தரை வீட்டிற்குள் ஐஸ் பெட்டியில் மூதாட்டியின் சடலம் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மனநோயாளியாக இருக்கக்கூடுமா? என்ற சந்தேகத்தின் பேரில் அந்நபர், கைது செய்யப்பட்டப்பின்னர் மனநல சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தெளிவான சிந்தனையில் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்த அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு சட்டத்துறை அலுவலகம், போலீஸ் துணைக்கு நேற்று அனுமதி அளித்தது.

முன்னதாக , இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, அந்த பகுதி நேர பாதிரியார், அமர்ந்து வருவதற்கு போலீஸ் துறை வழங்கிய சக்கர நாற்காலி வண்டியை ஏற்க அவர் மறுத்து விட்டடார். பின்னர் சற்று கை தாங்கலாக அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் , கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related News