தாபோங் ஹாஜி யாத்ரீகர் வாரியத்தின் அரச விசாரணை ஆணைய அறிக்கை தொடர்பான விசாரணையில், மேலும் மூன்று பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.அர்.எம் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தாபோங் ஹாஜியின் துணை நிறுவனம் ஒன்றில் கட்டுமானப் பிரிவு துணைப் பொது மேலாளர், தொழில் பாதுகாப்பு மேலாளர் மற்றும் திட்ட இயக்குநர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 4 லட்சத்து 50 ஆ யிரம் ரிங்கிட் மதிப்பிலான அபராதக் கட்டண முறைகேட்டிற்கு இவர்கள் உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
50 வயது மதிக்கத்தக்க இவர்களை ஐந்து நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க புத்ராஜெயா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 29 ஆம் தேதி பகிரங்கமாக வெளியிடப்பட்ட தாபோங் ஹாஜி அரச விசாரணை அறிக்கையை ஆராய அமைக்கப்பட்ட எஸ்.பி.அர்.எம்-இன் சிறப்புக் குழு, இதுவரை இந்த ஊழல் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









