மலாக்கா, மார்ச்.08-
அரசு உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்னும் திறந்திருப்பதாக உயர்க்கல்வித் துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் கல்விச் செலவை அரசாங்கமே ஏற்கும் என்பதால், அவர்கள் படிப்பை முடித்த பிறகு பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வரும் ஏப்ரல் - மே மாதங்களில் புதிய பட்டப்படிப்பு சேர்க்கைகள் தொடங்கும் போது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








