- கல்வி ஆர்வலர் வலியுறுத்துகிறார்
அண்மையில் பொது பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்ற இந்திய மாணவர் ஒருவர், அந்த பட்டமளிப்பு விழாவில் தாம் சந்தித்தப் பிரச்னையை துணிச்சலாக குரல் எழுப்பியது மூலம் இனி கல்வித் தகுதியை அடிப்படையாக கொண்ட இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்வதற்கான காலம் கனிந்து விட்டது என்பதையே காட்டுகிறது என்று கல்வி ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளியை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகள் அதன் இலக்கை நோக்கி அடைந்து வருகிறது. எனவே தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், நடப்பில் உள்ள விழுக்காட்டு விகித முறை, கட்டம் கட்டமாக குறைக்கப்பட்டு, கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு வாய்ப்புகளும் முன்னுரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதையே அந்த இந்திய மாணவரின் துணிச்சலான பேச்சு காட்டுவதாக மலேசிய கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுத் தலைவர் நோர் அசிமா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் அந்த இந்திய மாணவனின் பேச்சு குறித்து கருத்துரைக்கையில் ஒரு கல்வியாளரான நோர் அசிமா மேற்கண்டவாறு கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள இனத்தை பொருட்படுத்தப்படாமல் கல்வித் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பும், உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அரசாங்க உபகாரச் சம்பளம் மட்டுமின்றி அரசாங்க ஏஜென்சிகள், தனியார் நிறுவனங்கள், முன்னாள் மாணவர் அமைப்புகள், தனவந்தர்கள் ஏற்படுத்தியுள்ள கல்வி உபகாரச் சம்பளங்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நோர் அசிமா வலியுறுத்தினார்.
இது போன்ற வாய்ப்புகளும், சலுகைகளும் தாங்கள் மட்டுமே பெறுவதற்கு உரிமைப்பெற்றவர்கள் என்ற சிந்தனையிலிருந்து மலேசியர்கள் மாற வேண்டும் என்று நோர் அசிமா கேட்டுக்கொண்டார்.








