கோலாலம்பூர், பிப்ரவரி.20-
கொலை, பாலியல் வன்கொடுமை, கூட்டுக் கொள்ளை, வீட்டை உடைத்துத் திருடுதல், அரசு ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு உதவ 36 நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறுகையில், குற்றவியல் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கோலாலம்பூர் குற்றப்பிரிவு விசாரணைத் துறை மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இந்த நபர்களின் உதவி தேவைப்படுகிறது என்றார்.
இந்த வழக்குகள் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 302, 376, 395, 397, 457, 326, 324, 354, 365 மற்றும் 170 ஆகியவற்றின் கீழும், 1961 கடத்தல் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுகின்றன.
வடிவேலு வரதராஜு, ஈஸ்வரன் முனியாண்டி, சதீஸ்வரன் ஜெயந்திரன், கார்த்திக் மணிமாறன், குமரேசன் கணேசன், ரவிக்குமார் கணேசன், சர்வீன் ராஜ் கார்த்திகேசு மற்றும் சுந்தரேசன் சந்திரன் ஆகியோர் தேடப்பட்டு வரும் 36 பேர்களில் அடங்குவர் என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
"மேற்குறிப்பிட்ட நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவான D4 துணை கண்காணிப்பாளர் கே. ராஜ்குமாரை 03-21460613 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளலாம் என்று டத்தோ ஃபாடில் கேட்டுக் கொண்டார்.








