கோலாலம்பூர், ஏப்ரல்.26-
மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய Ops ‘Toyu’ நடவடிக்கையில், புக்கிட் காயூ ஈத்தாம் எல்லை வழியாகச் சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாட்டினரை மலேசியாவிற்குள் கடத்தி வந்த குடிநுழைவுத்துறை உயர் அதிகாரி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சிண்டிகேட் ஒவ்வொரு வெளிநாட்டினரிடமும் ஆயிரம் ரிங்கிட் வசூலித்ததோடு, தகுதியற்றவர்களுக்கு கடப்பிதழ் முத்திரை குத்த ஒரு கடப்பிதழுக்கு 400 ரிங்கிட் என்ற வீதத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிக்குக் கையூட்டு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்திற்குப் புறம்பானச் செயல்பாட்டினால் மலேசிய அரசுக்கு சுமார் 4.1 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், சோதனையின் போது கடப்பிதழ்கள், கைப்பேசிகள், ரொக்கப் பணம், வாகனங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.








