ஜோகூர் பாரு, சிங்கப்பூர் இடையிலான விரைவுப் போக்குவரத்துத் திட்டம் மற்றும் வுட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்படும் புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகியவை சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
சுமார் 5.66 ஹெக்டேர் பரப்பளவில் உருவாகும் இந்தப் போக்குவரத்து மையம், வுட்லண்ட்ஸ் கேட்வே மேம்பாட்டுத் திட்டத்தின் மையப்பகுதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுக்க பசுமைப் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பாக ஜேடிசி கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள டெண்டர் ஆவணங்களின் படி, இந்த மையம் ஆர்டிஎஸ் மற்றும் எம்ஆர்டி ரயில் சேவைகளுடன் நேரடி இணைப்பைப் பெறும். மேலும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் பயன்படுத்தும் வகையில் நிலத்தடியில் தனி சாலை வலையமைப்பும் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தரைமட்ட சாலைகளில் கனரக வாகனப் போக்குவரத்து குறைந்து, போக்குவரத்து நெரிசல் தணிவதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணிக்க வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகு, ஜோகூர்–சிங்கப்பூர் இடையேயான எல்லைத் தாண்டும் போக்குவரத்து, மேலும் திறம்பட நடைபெறுவதுடன், உட்லண்ட்ஸ் பகுதி முக்கிய போக்குவரத்து மற்றும் வர்த்தக மையமாக வளர்ச்சி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








