ஹோட்டல் அறைகள், தனியார் வீடுகள் மற்றும் அழகு நிலையங்களில் சந்தை விலையை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் மருத்துவ மற்றும் அழகுசிகிச்சைகளைப் பெறும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் குல்ஜித் சிங் வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பாக அழகு சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவர் உரிய அனுமதி பெற்ற மருத்துவமனை அல்லது கிளினிக்கை நடத்துகிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட மருத்துவமனை அல்லது கிளினிக் இல்லாமல், சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே மருத்துவச் சேவைகளை விளம்பரப்படுத்தும் நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த கட்டணத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிகிச்சை பெறுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளையே பொதுமக்கள் அணுக வேண்டும் எனவும் குல்ஜித் சிங் அறிவுறுத்தியுள்ளார்.








