பினாங்கில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், சுகாதார விதிமுறைகளை மீறிய 177 உணவகங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் கூய் ஜி சென் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார். மொத்தம் பரிசோதிக்கப்பட்ட 4,069 வளாகங்களில், பொதுமக்களின் புகார்கள் மற்றும் சோதனைகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மூடப்பட்ட வளாகங்களில் 68.9 விழுக்காடு பூச்சித் தொல்லை காரணமாகவும், 27.7 விழுக்காடு போதிய தூய்மையின்மை காரணமாகவும், 3.4 விழுக்காடு உணவு நச்சுத்தன்மை புகார்கள் காரணமாகவும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஏழு வளாகங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் டைபாய்டு தடுப்பூசி போடவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
உணவகங்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் மருத்துவமனை கேன்டீன்களும் இதில் அடங்கும். இத்துடன், தூய்மை குறைபாடுகளுக்காக 1,771 சட்டப்பூர்வ அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கை மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.








