உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும், போர்ட் கிள்ளான் துறைமுகம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4 விழுக்காடு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று போர்ட் கிள்ளான் சுயேட்சை மண்டலமான பிகேஎஃப்சிக்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், அங்கு பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புதிய மேம்பாட்டுத் திட்டங்களை முறைப்படி தொடக்கி வைத்தார்.
விஸ்மா கோல்டன் ஹார்ஸ் முன்கூட்டிய அறிமுக விழா, க்யூ சென்டர் தொழிலாளர் குடியிருப்புத் திட்டம், சண்டெக் மெட்டீரியல்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி தொழிற்சாலை திறப்பு விழா, கோல்டன் ஹார்ஸ் ரப்பர் 2 ஆம் கட்ட தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் ஸ்மார்ட் இன்டெலிஜென்ஸ் தொழிலியல் பூங்கா ஆகிய திட்டங்களை அந்தோணி லோக் தொடக்கி வைத்தார்.
"விஸ்மா கோல்டன் ஹார்ஸ் முன்கூட்டிய அறிமுக விழாவில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு பாரம்பரிய சிங்க நடனத்துடன் உற்சாகமான முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது."
மேலும், சிலாங்கூர் மாநில அரசுடன் நிலுவையில் உள்ள நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன், போர்ட் கிள்ளானின் 3-வது துறைமுக முனைய மேம்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
3ஆவது துறைமுகத் திட்டம் பொது-தனியார் கூட்டுமுறை மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் செயல்படுத்தப்படும் என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.


















