மூடா கட்சி வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்துள்ளது. இப்பட்டியலில் 50 விழுக்காடு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜிஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தேர்வு வாரியத்தால் நேர்காணல்கள் நடத்தப்பட்டு இந்தத் தேர்வு முறை முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், விரைவில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்திவிட்டு, மக்களின் உள்கட்டமைப்பு மற்றும் வெள்ளப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமிரா ஆயிஷா வலியுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் மலேசியா சோசலிஷ கட்சியான பி.எஸ்.எம். முடன் இணைந்து 'முற்போக்குக் கூட்டணி' என்ற பெயரில் மூடா கட்சி களம் காண்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்முனைப் போட்டிகள் ஏற்படுவதை தவிர்க்க பெர்சத்து, பாஸ் போன்ற பிற பிரதான எதிர்க்கட்சிகளுடன் கருத்திணக்கம் காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த மூடா கட்சி தயாராக இருப்பதாக அமீரா தெரிவித்தார். தற்போதைக்கு பி.எஸ்.எம். கட்சியுடனான கூட்டணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








