மூன்று யானைகளை ஜப்பானுக்கு மாற்றுவதற்காக அரசாங்கத்திற்கு இல்லாமல், சில தனிநபர்களுக்குச் சுமார் 50 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறி, மலேசிய இயற்கைச் செல்வப் பாதுகாப்பு அமைப்பான பெக்கா புத்ராஜாயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் அளித்துள்ளது.
காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய மூன்று யானைகள் ஓசாகாவில் உள்ள தென்னோஜி மிருகக்காட்சிசாலைக்கு மாற்றப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் இராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கணக்கிற்குச் செல்ல வேண்டிய இந்தத் தொகை சில தனிநபர்களின் பைகளில் சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக மொத்தம் எட்டு நபர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இப்புகாரைச் சமர்ப்பிக்கச் சென்றபோது, ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற பாதுகாப்பு விதியால் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.








