கோல லங்காட் மாவட்டம் தெலுக் மெங்குவாங் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று மாலை வெறிச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு உள்ளூர் நபர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தி மற்றும் மூங்கில் குச்சியை கையில் ஏந்திய நிலையில் கண்டனர்.
இச்சம்பவம் குறித்து கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேகநபர் மிகுந்த ஆத்திரத்துடன் நடந்து கொண்டு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரோந்து வாகனங்களை நோக்கி ஆயுதங்களை காட்டி மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது உணவகத்திற்கும் அங்கு இருந்த வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








