சிகாமாட், பிப்ரவரி.18-
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிகாமாட், புக்கிட் சிப்புட், தாமான் டாமாய் ஜெயா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இடது காலை இழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிடெண்டென் Mohd Jumazanzahir Chek Ismail கூறுகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சீனப் புத்தாண்டை முன்னிட்டு shoot cake 4 D 16 shot premium ரக பட்டாசுகளை வெடிக்கச் செய்த போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு எதிர்பாராத விதமாக வெடித்ததில் அவரது இடது கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துண்டானது.
பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக சிகாமாட் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழங்காலுக்குக் கீழ் அவரது இடது கால் துண்டிக்கப்பட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவர் சீரான நிலையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








