பட்டர்வெர்த்,ஜன.11
Cannabis போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த 32 வயதுடைய முன்னாள் விமானப் பணியாளர் ஒருவரை பினாங்கு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
அலிஃப் அசாரி அப்துக் அசிஸ் என்ற அந்த முன்னாள் விமானப் பணியாளருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தோல்விக் கண்டதைத் தொடர்ந்து அவரை எதிர்வாதம் புரிவதற்கு அழைக்காமலேயே விடுதலை செய்வதாக உயர் நீதிமன்ற ஆணையாளர் ஃபத்தியா இட்ரிஸ் தமது தீர்ப்பில்தெரிவித்தார்.
அந்த விமானப் பணியாளர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நேர்முகப் பேட்டிக்காக பட்டர்வொர்த் புறவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த வேளையில் போலீஸ் சோதனையின் போது 1.9 கிலோ cannabis போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அந்த விமானப் பணியார் சார்பில் வழக்கறிஞர்கள் RSN ராயர் மற்றும் R. அர்விந்த ஆகியோர் ஆஜராகினர்.








