கோலாலம்பூர், பிப்ரவரி.01-
சுமார் 15 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் இருக்கும் பட்டிசத்தில் பத்துமலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் சிறப்பாகவும் கட்டுக்குள்ளும் இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தைப்பூச விழாவில், சுமார் 14 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி ஆலயம் வீற்றிருக்கும் பத்துமலை வளாகத்திற்கு வருகை புரிந்து, போலீஸ் படையின் தண்ணீர் பந்தல் மற்றும் பாதுகாப்புப் பணிகளைப் பாவையிட்ட காலிட் இஸ்மாயில், கோம்பாக் மாவட்ட போலீசார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பந்தலில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
தைப்பூச காலக்கட்டத்தில் பத்துமலை சுற்றியுள்ள நான்கு முக்கிய மண்டலங்களில் சுமார் 1,400 பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பணிகள் 24 மணி நேரமும் மூன்று சுழற்சி முறையில் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சுழற்சியிலும் சுமார் 400 பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமை சீராக உள்ளது. சிறிய அளவிலான சம்பவங்களே நடந்துள்ளன, அவை அனைத்தும் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. தேவையற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.
பின்னர் மனித வள அமைச்சான கெசுமா ஏற்பாட்டில் நடைபெற்ற பக்தர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முஹமட் காலிட் இஸ்மாயில், உணவுப் பைகளைப் பத்துமலையில் குழுமியுள்ள பக்தர்களுக்கு விநியோகம் செய்தார். ஐஜிபி. வருகையின் போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் CID இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் ஆகியோர் உடன் இருந்தனர்.








