May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்துக்குள்ளான சிறார்களை டாக்டர் லிங்கேஸ்வரன் நேரில் சென்று சந்தித்தார்

Share:

நிபோங் தெபால், பிப்.19-

பினாங்கு, நிபோங் தெபால், சுங்கை பாக்காப்- பட்டர்வொர்த் கூட்டரசு நெடுஞ்சாலையில் நேற்று காலையில் நிகழ்ந்த லோரி – மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் கடுங்காயங்களுக்கு ஆளான சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் டர்ஷன் மற்றும் அச்சிறுவனின் தங்கை கவர்ஜித்தா ஆகியோரை மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

செபராங் பிறை வட்டாரத்தில் 20 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு தமது 6 மாத கால சம்பளத்தில் பள்ளி உபரணங்களை வழங்குவதற்கான வவுச்சர்களை நேற்று காலையில் வழங்கிக்கொண்டு இருந்த டாக்டர் லிங்கேஸ்வரன், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அவ்விரு சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சுங்கைப் பாக்காப் மருத்துவமனைக்கு விரைந்தார்.

சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன், அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டர்ஷனையும், அவரின் 5 வயது சகோதரி கவர்ஜித்தாவை நேரில் சென்று சந்தித்ததுடன், அவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தனது பாட்டியின் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த விபத்தில் சிறுவன் டர்ஷனுக்கு கடுங்காயம் ஏற்பட்டுள்ளது. கவர்ஜித்தா காலை இழக்கும் அபாயத்திற்கு ஆளாகியிருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் துயரத்தில் மூழ்கியிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் சிறார்களைக் கவனித்துக் கொள்வதற்கு கைச்செலவிற்கு கணிசமான நிதி உதவியையும் வழங்கினார்.

இரு உடன் பிறப்புகளும் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

Related News