தனது முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா என்ற கே. பத்மநாபன் இருக்கும் இடம் குறித்த புதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை எம். இந்திரா காந்தி மேற்கொண்ட முயற்சி இன்று தோல்வியடைந்தது.
அரசாங்கத்தின் புடி95 மற்றும் சாரா நிதியுதவித் திட்டங்களை ரிதுவான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புதிய தகவல்களை ஆதாரமாக ஏற்க புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆதாரங்கள் உயர் நீதிமன்ற விசாரணையின் போது இல்லை என்றாலும், வழக்கின் இறுதித் தீர்ப்பை மாற்றும் அளவிற்கு இவை வலுவானவை அல்ல என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி முகமது ஜைனி மஸ்லான் தெரிவித்தார்.
தனது மகள் பிரசன்னா டிக்சாவை கண்டுபிடிக்கத் தவறியதாகக் கூறி போலீஸ் துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி தாக்கல் செய்த 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரும் வழக்கின் ஒரு பகுதியாக இந்த மேல்முறையீடு அமைந்தது.
16 ஆண்டுகளுக்கு முன்பு தனது 11 மாதக் குழந்தையான பிரசன்னா டிக்சாவை முன்னாள் கணவர் கடத்திச் சென்ற நிலையில், மகளை மீட்க இந்திரா காந்தி இன்றும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








