இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த மலேசியர் ஒருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு கலிமந்தன் மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை காலை புறப்பட்ட ‘மேத்யூ ஏர் நுசந்தாரா’ நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஏர்பஸ் ஹெலிகாப்டர், கிளம்பிய ஐந்து நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
தேடுதல் மற்றும் மீட்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், செங்குத்தான மலைச்சரிவுகள் கொண்ட காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் சிதைந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் மற்றும் ஆறு பயணிகள் என அனைவரும் உயிரிழந்ததை இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மாநில தலைநகரான போந்தியானாக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மோசமான விமானப் பாதுகாப்புப் பதிவுகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில், கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.








