அரசாங்க மருத்துவமனைகளில் அந்நிய நாட்டவர்கள் சிகிச்சை பெற்றுச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமத் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "அந்நிய நாட்டவர்களின் மருத்துவ நிலுவைத் தொகை 2023-இல் 34.97 மில்லியன் ரிங்கிட்டாகவும், 2024-இல் 33.46 மில்லியன் ரிங்கிட்டாகவும் இருந்த வேளையில், 2025-இல் அது 30.57 மில்லியன் ரிங்கிட்டாக குறைந்துள்ளது" என்றார்டாக்டர் சுல்கிப்ளி. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 30 மில்லியன் ரிங்கிட் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படும் புகார்களை அவர் மறுத்துள்ளார்.
மலேசியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ மானியங்கள் அந்நியர்களுக்குப் பொருந்தாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவசரக் காலங்களில் வரும் எவரையும் திருப்பி அனுப்பாமல் உயிரைக் காப்பதே அமைச்சின் முதன்மைக் கொள்கை என்றார்.
அதே வேளையில், முதற்கட்ட முன்பணம் வசூலிப்பது, மற்றும் குடிநுழைவுத்துறை, அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து நிலுவைத் தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.








