ஜோகூர் பாருவில் கடந்த வாரம் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் சந்தேக நபர் கடந்த புதன்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, குடிநுழைவு சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
முதல் நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைந்திருந்த மற்ற நான்கு சந்தேக நபர்களையும் சிங்கப்பூர் போலீசாரின் உதவியுடன் நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் வெளிநாட்டவர்கள். இவர்களுக்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்பதோடு, போதைப்பொருள் பரிசோதனையில் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன.
இவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டம் 302- ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு. விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஒரு கும்பலால் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில், கழுத்தில் பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்ட நபர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.








