கோலாலம்பூர், அக்டோபர்.22-
வரும் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாடும், அதனுடன் தொடர்புடைய அமர்வுகளின் போதும் பயணச் செயல்பாடுகளைச் சீராக உறுதிப்படுத்த, ரெபிட் கேஎல் நிறுவனம் முக்கிய நிலையங்களில் கூடுதலாக 400 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மாநாட்டுக் காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்துச் சேவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் செயலூக்கமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
உச்ச நேரங்களில் தொடர்வண்டிகள் இயக்கத்தை நீட்டிப்பதுடன், பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்தவும் ரெபிட் கேஎல் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில், Express Rail Link - ERL நிறுவனம் KLIA Ekspres தொடர்வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன், KL Sentral-லை நோக்கிச் செல்லும் KLIA Transit தொடர்வண்டிகளும் அக்டோபர் 22 முதல் 28 வரை கூடுதலாக இயக்கும் என்று அறிவித்துள்ளது.








