அலோர் ஸ்டார், மே.24-
அலோர் ஸ்டாரில் நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையின் போது, தேசிய கால்பந்து வீரர் ஒருவருக்குச் சொந்தமான Toyota Vellfire சொகுசு வாகனம் சாலை வரி காலாவதியானதாலும், காப்பீடு இல்லாததாலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையின் போது வாகனம் கால்பந்து வீரரின் மைத்துனரால் ஓட்டப்பட்டதாகவும், வரி காலாவதியான விவரம் தனக்குத் தெரியாது என்று அவர் கூறியதாகவும் கெடா மாநில போக்குவரத்துத் துறை இயக்குநர் Stien Van Lutam தெரிவித்தார்.
வாகன உரிமையாளரின் பின்னணியைப் பாராமல், அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்ய இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். சம்பந்தப்பட்ட வாகனம் தற்போது போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.








