உலு திரங்கானு, டிசம்பர்.06-
வாகனம் ஒன்று சாலையை விட்டு விலகி, பாதாளத்தில் விழுந்ததில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த ஜோடியினர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் கோல பெராங், ஜாலான் கோல ஜெனெரிஸ் - சுங்கை காவி- அரிங் சாலையின் 52 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் 52 வயது ஹசான் ஷாஸாலி மற்றும் 34 வயது சுஸைமா சே அஸிஸ் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்று போலீசார் அடையாளம் கூறினர். ஒரு பள்ளி ஆசிரியரான ஹசான், தனது பள்ளியில் சிற்றுண்டிச் சாலையை நடத்தி வரும் சுஸைமாவை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக இருந்தது என்று உலு திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
அவ்விருவரும் பயணம் செய்த Toyota Fortuner வாகனம் சுமார் 60 மீட்டர் பாதாளத்தில் விழுந்தது. கடும் காயங்களுக்கு ஆளான இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷருடின் குறிப்பிட்டார்.








