பினாங்கு,ஜூலை 27-
பினாங்கு மாநிலத்தில் மழையின்றி வறட்சி நிலை தொடர்வதால், மாநிலத்தில் உள்ள பதிவு பெற்ற 5 லட்சத்து 93 ஆயிரத்து 255 வீட்டுப் பயனர்கள் அன்றாட நீர் பயனீட்டில் பத்து விழுக்காட்டு நீரை குறைத்துக்கொள்ளும்படி பினாங்கு நீர் விநியோக கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாநில மக்கள் நீர் தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்நோக்காமல் இருப்பதற்கு வரும் செப்டம்பர் மாதம் மழை காலம் வரையில் தாங்கள் பயன்படுத்தும் நீர் தேவையில் பத்து விழுக்காட்டை குறைத்துக்கொண்டால் நடப்பு நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று பினாங்கு நீர் விநியோக கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே. பத்மநாபன், பினாங்கு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றாட நீர் பயனீட்டில் பத்து விழுக்காடு நீர் குறைத்துக்கொள்வது மூலம் பினாங்கு மாநிலத்தில் ஒட்டுமொத்த அளவில் நாள் ஒன்றுக்கு 5 கோடி லீட்டர் நீரை சேமிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








