சிலாங்கூர், ஜூன் 18-
சிலாங்கூர், கோம்பாக்-க்கிலுள்ள சமயப்பள்ளி ஒன்றில், இருவரின் உயிரைப் பறித்த நச்சுணவு பாதிப்பு தொடர்பில், கேட்டரிங் நடத்துநர் உள்பட 15 நபர்களிடம் போலீஸ் கடந்த வாரம் விளக்கத்தை பதிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் முதலானோர் அதில் அடங்குவர் என கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் நூர் அரிஃபின் முகமது நசீர் தெரிவித்தார்.
நச்சுணவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று விளக்கம் பெறப்படும் என்றாரவர்.
இம்மாதம் ஜூன் மாதம் 8ஆம் தேதி, கோம்பாக், சுங்கை சிஞ்சின்-னிலுள்ள சமயப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பீஹுன் மீ, முட்டை உள்ளிட்ட உணவை உட்கொண்ட 19 மாத பெண் பிள்ளையும் 17 வயது பையனும் நச்சுணவு பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
அது குறித்து விசாரணையை தொடங்கிய சிலாங்கூர் சுகாதாரத் துறை, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 247 பங்கேற்பாளர்களில் 82 பேர் நச்சுணவு பாதிப்புக்கு இலக்கானதை கடந்த வாரம் உறுதிபடுத்தியது.








