நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், 'சிறுபான்மை அரசு' என்ற வாதம் மாநில அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அரசியலமைப்பு நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் வான் அகமது பவுசி தெரிவித்துள்ளார்.
14 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால், அவர்கள் 19 இடங்களுடன் 'எளிய பெரும்பான்மை' பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில சட்டப்படி, மந்திரி பெசார் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை ஆட்சியாளர் கலைப்புக்கு அனுமதி மறுத்தால், மந்திரி பெசார் கட்டாயம் பதவி விலக வேண்டும்.
தற்போதுள்ள மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருமாறு சவால் விடுத்துள்ள நிலையில், புதிய முதலமைச்சரின் பெயரை நெகிரி செம்பிலான் சமஸ்தானபதியிடம் சமர்ப்பிக்க பாரிசான் நேஷனலுக்கும் , பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சட்டப்பூர்வ வாய்ப்புள்ளது என்பதை அந்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.








