கில்லாங், அக்டோபர் 04-
தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய 15 லட்சம் வெள்ளியை திருப்பிக்கொடுப்பதில் இழுத்தடிக்கும் போக்கை கையாண்ட கிள்ளானைச் சேர்ந்த ஜெயசர்மா, அந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இருப்பதற்கு, அவரையும், அவரின் மனைவியையும் மிரட்டியதாக தங்களுக்கு எதிராக பொய் புகார் செய்தது தொடர்பில் அவர்கள் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய இரும்புப்பொருட்கள் மற்றும் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டு, நியாயமான வழியில் கடுமையாக உழைத்து சம்பாதித்து பொருள் ஈட்டி வரும் தங்களைப் போன்ற வர்த்தகர்கள், ஜெயசர்மா போன்ற மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்க ஜெயசர்மாவிற்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை காவல்துறை தலைவர் Tan Sri Razarudin Husain உறுதி செய்ய வேண்டும் என்று சித்தியவான், RAKSHA METAL நிறுவனத்தின் வர்த்தக சகாக்களில் ஒருவரான குணாளன் ராஜகோபால் கேட்டுக்கொண்டார்.

என்னைப் போன்ற வியாபாரிகள், காவல் துறை மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் ஏமாற்றப்பட்டதைப் போல் மற்றவர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, பொய்புகார் செய்துள்ள ஜெயசர்மா விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குணாளன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ஜெயசர்மாவிற்கு தாங்கள் 15 லட்சம் வெள்ளியை செலுத்தியதாக குணாளன் குறிப்பிட்டார்.
அந்த சிங்கப்பூர் கொள்முதல் திட்டம், கிடைக்காத நிலையில் ஜெயசர்மா, தங்களிடம் பெற்ற 15 லட்சம் வெள்ளியில் எஞ்சியத் தொகையான 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 வெள்ளியை திரும்ப கொடுக்காமல் இழுத்தடிக்கும் போக்கை கையாண்டதாக குணாளன் தெரிவித்தார்.
அந்த எஞ்சியப் பணத்தை திரும்பக் கோரும் முயற்சியில் தாமும் தமது வர்த்தக சகாக்களும் ஈடுபட்ட போது தங்களுக்கு எதிராக ஜெயசர்மாவும், அவரின் மனைவியும் பொய் புகார் செய்து,/ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்பில் ஜெயசர்மா மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணாளன் வலியுறுத்தியுள்ளார்..








