விலைவாசி உயர்வு உட்பட மக்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்னைகளை முழு வீச்சில் தீர்ப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் தவறிவிட்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பணவீக்க உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளன. மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகள் தலைத்தூக்கியுள்ளன. இந்நிலையில் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் எந்த வகையிலும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று ஹாடி அவாங் தெரிவித்தார்.
விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய அரிசி விலை, திடீரென உயர்ந்துள்ளது. அதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், மக்களின் அடிப்படை பிரச்னைகளை விடுத்து மற்ற விவகாரங்களில் அரசாங்கம் தற்போது அதீத கவனம் செலுத்தி வருவதாக மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டினார்.








