தனக்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தற்காலிகமாக விடுதலை செய்யப்ப்டடு இருப்பதை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம், தீர்ப்பை மனு ஆய்வு செய்யக்கோரி வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
துணைப்பிரதமருக்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் தற்காலிகமாக மீட்டுக்கொள்வதாக சட்டத்துறை அலுவலகம் மனு ஒன்றை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட்டை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தற்காலிமாக விடுதலை செய்தது.
இந்த வழக்கின் பூர்வாங்க விசாரணையில் ஜாஹிட்டிற்கு எதிராக சுமத்தப்பட்ட 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதால் அவரை எதிர்வாதம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் இந்த லஞ்ச ஊழல் வழக்கு நடைபெற்றது. 77 நாட்கள் நடைபெற்ற இவ்வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்து இருந்தனர்.
ஜாஹிட்டிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்டை முகாந்திரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அவரின் விடுதலை, சர்ச்சைக்கு இடமாக இருப்பதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கரன் சீ யீ லின் தெரிவித்துள்ளார்.








