யோங் பெங் அருகே வடக்குத் தெற்கு விரைவுச்சாலையில் 14 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில், ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டியும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அனைவரையும் பேருந்திலிருந்து வெளியேற்றினர்.
ஜோகூர் பாருவிலிருந்து, சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் நோக்கிச் சென்ற பேருந்தில், மதியம் 1.25 மணிக்கு 137-வது கிலோ மீட்டர் பகுதியில் தீ ஏற்பட்டது.
இதனையடுத்து, யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, 9 வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
ஆனால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே தீயில் பேருந்தின் 80 சதவீதம் சேதமடைந்தது.
இந்நிலையில், தீ முழுமையாக மதியம் 2.48 மணிக்கு அணைக்கப்பட்டதாக யோங் பெங் தீயணைப்பு நிலைய செயல்பாட்டுப் பிரிவுத் தளபதி முஹமட் அமீர் ஷா ஹம்ஸா தெரிவித்துள்ளார்.








