ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.15-
ஜார்ஜ்டவுன், Jalan Mount Erskine பகுதியில் நள்ளிரவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததில், அவ்வழியாகச் சென்ற இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தின் போது பெரோடுவா விவா, பெரோடுவா பேஸா ஆகிய கார்களில் இருந்த மூன்று நபர்களும் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக வெளியேறி நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குனர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாகான் ஜெர்மால் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள், சிறப்புக் கருவிகளைக் கொண்டு விழுந்த மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி அகற்றிப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். காவற்படை, பொதுப் பாதுகாப்புப் படை, தெனாகா நேஷனல் பெர்ஹாட் ஊழியர்களின் உதவியுடன் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்புப் பணி அதிகாலை 3.29 மணியளவில் நிறைவடைந்தது.








