புத்ராஜெயா, ஜனவரி.29-
இளைஞர்களிடையே பல மொழிகளில் பேசும் திறனை வளர்ப்பதற்காக புத்ராஜெயாவில் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பன்மொழித் தலைமுறையை உருவாக்கும் அழைப்பிற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதான ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் அல்லது அரபு ஆகிய மொழிகளில் இளைஞர்கள் சரளமாகப் பேசுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
வகுப்பறை கற்றல் மட்டுமே போதாது என்பதால், வார இறுதி நாட்களில் முறைசாரா உரையாடல்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் மூலம் மொழிகளைக் கற்க வாய்ப்புகள் இளையோர்களுக்கு வழங்கப்படும் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
இதற்காக இலவச மொழி வகுப்புகளை நடத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் 1 முதல் 2 மணிநேரம் வரை வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புத்ராஜெயாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடவும், மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இளையோர்களுக்காக இந்தத் திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்று புத்ராஜெயாவில் 2026 ஆம் ஆண்டுக்கான புத்ராஜெயா பொது தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் ஹன்னா இயோ இதனைத் தெரிவித்தார்.








