கிளாந்தானில் உள்ள போஸ் பாசிக் பகுதியில், காட்டு யானைகள் அடிக்கடி தங்கள் வீடுகளுக்கு அருகில் சுற்றித் திரிவதால், அப்பகுதியில் வசிக்கும் ஒராங் அஸ்லி சமூகத்தினர் மிகவும் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை நேரத்திலேயே காட்டு யானைகளின் அட்டகாசம் தொடங்கிவிடுவதால், தாங்கள் மிருகக்காட்சி சாலையில் வசிப்பது போல் உணர்வதாக அக்கிராமவாசிகளில் ஒருவரான அஸ்னான் சியாம் தெரிவித்துள்ளார்.
மேலும், நான்கு காட்டு யானைகள் அந்தப் பகுதியில் உள்ள சோளம், நெற்பயிர் மற்றும் தரையில் விழுந்த துரியான் பழங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பல முறை புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அஸ்னான் சியாம், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக விவரித்துள்ளார்.
இதனிடையே, அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடியிருப்பாளர்கள் இரவு நேரங்களில் தூங்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








